மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் குவாரிகளில் மனநலம் பாதித்தோரை அழைத்து வந்து நர பலி கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 14ஆம் தேதி இ.மலம்பட்டியை அடுத்துள்ள சின்னமலம்பட்டி மணிமுத்தாறு பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் முன்னிலையில் தோண்டியதில் நான்கு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சட்ட ஆணையர் உ.சகாயம் கோரியதையடுத்து, அதே இடத்தில் 12 அடி ஆழம் வரை தோண்டும் பணி ஞாயிறன்றும் தொடர்ந்து நடைபெற்றது. கோட்டாட்சியர் செந்தில்குமாரி, சட்ட ஆணையர் உ.சகாயம் குழுவைச் சேர்ந்த ஆல்பர்ட், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வேலு ஆகியோர் தலைமையில் இப்பணி நடைபெற்றது.