பாலியல் புகார் தொடர்பாக தினமும் 500 - 550 அழைப்புகள்!!

திங்கள், 22 நவம்பர் 2021 (12:23 IST)
பாலியல் புகார் தொடர்பாக தினமும் 500 முதல் 550 அழைப்புகள் வரை வருகின்றன என டி.பி.ஐ. வளாகத்தில் இருக்கும் அதிகாரிகள் தகவல்.

 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோவை மற்றும் கரூரில் பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள், மாணவிகள் பாலியல் தொல்லை குறித்து புகாரளிக்க 14417 என்ற உதவி எண் அறிவிக்கப்பட்ட நிலையில் வரும் காலங்களில் அந்த எண்களை பள்ளி பாட புத்தகத்திலேயே அச்சிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே தற்போது, முன்னர் தினமும் 150 முதல் 200 அழைப்புகள் வரை வரும். அவை பெரும்பாலும் உயர்கல்வி குறித்த சந்தேகங்கள், பொதுத்தேர்வு குறித்த அச்சம் என கல்வி சார்ந்தவைகளாக இருக்கும். ஆனால் சில நாட்களாக உதவி மையத்துக்கு தினமும் 500 முதல் 550 அழைப்புகள் வரை வருகின்றன என டி.பி.ஐ. வளாகத்தில் கல்வி வழிகாட்டி உதவி மையத்தில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும்  வரும் அழைப்புகள் பெரும்பாலும் பாலியல் புகார்கள் மற்றும் அது தொடர்புடையதாகவே உள்ளன. ஆனால் பாலியல் புகார்களை கையாள்வதற்கான வழிகாட்டுதல் இல்லாததால் குழப்பம் நிலவுகிறது. இதனால் இவற்றை கையாள முடியாமல் அதிகாரிகள் திணறுகிறார்கள். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்