சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் மின் கோளாறு காரணமாக குளிர்சாதன எந்திரம் வெடித்து தீ பிடித்ததில் படுக்கை எரிந்து அதில் தூங்கிய ஒன்றரை வயது பெண் குழந்தை தீயில் கருகி பலியானது. தாய், மகன் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் எம்.எம்.டி.ஏ நகரை சேர்ந்தவர் சண்முகநாதன். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவர் அலுவல் காரணமாக சிங்கப்பூர் சென்று உள்ளார். இவரது மனைவி ஸ்ரீவள்ளி (33). இவர் தாம்பரம் முடிச்சூர் சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு நாகார்ஜுனன் ( 8) என்ற மகனும், ஒன்றரை வயதில் மோனிஷா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
நேற்றிரவு வழக்கம் போல் வீட்டில் உள்ள குளிர்சாதனம் எந்திரம் பொருத்தப்பட்ட படுக்கை அறையில் ஸ்ரீவள்ளி, அவரது மகன் நாகார்ஜுனன், மகள் மோனிஷா ஆகியோர் படுத்து தூங்கி உள்ளனர். இன்று காலையில் அந்த வீட்டிலிருந்து இருந்து புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நிகழ்விடத்திற்கு சிட்லபாக்கம் காவல்துறை ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் காவல்துறையினர் விரைந்து வந்தனர். மேலும் தாம்பரத்தில் உள்ள தீயணைப்பு வண்டியும் விரைந்தது வந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் வீட்டின் கதை உதைத்து உள்ளே சென்றனர். அப்போது படுக்கை அறையில் பெண் குழந்தை கருகிய நிலையிலும், தாய் ஸ்ரீவள்ளியும், மகன் நாகார்ஜுனா மயங்கி நிலையிலும் கிடந்துள்ளனர்.
உடனடியாக ஸ்ரீவள்ளியும், நாகார்ஜுனா ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், படுக்கை அறையில் இருந்த குளிர்சாதன எந்திரத்தில் ஏற்பட்ட மின்கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருந்தாலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீவள்ளி கண் விழித்த பிறகு அவர்களிடம் விசாரித்தால்தான் மேலும் உண்மை நிலவரம் தெரிய வரும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.