வாய்ப்பு தாருங்கள், மாற்றிக்காட்டுகிறேன் - விஜயகாந்த்
திங்கள், 3 அக்டோபர் 2011 (12:18 IST)
''ஒரு தடவை தே.மு.தி.க.விற்கு வாய்ப்பு தாருங்கள், மாற்றிக்காட்டுகிறோம்'' என்று உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறினார்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தே.மு.தி.க. உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு பிரசாரம் செய்த அவர், உங்களுடையே வரிப்பணத்தை மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ செலவிட்டதாக கூறுகின்றனர். ஆனாலும் சுதந்திரம் அடைந்தபோது நாடு எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றும் உள்ளது. ஆனால் அந்த நிலையை தே.மு.தி.க. மாற்றி, மக்களுக்கு என்ன தேவையோ அதை அறிந்து செயல்படும்.
நான் கோபக்காரன். தவறு நடப்பதை கண்டால் கோபப்படுவது உண்மைதான். நாட்டில் நல்லது நடைபெற உள்ளாட்சி நல்லாட்சியாக இருக்க தே.மு.தி.க.வுக்கு வாக்களியுங்கள்.
மக்களுக்கு நல்லது செய்ய ஒரு சந்தர்ப்பத்தை கொடுங்கள். ஓடி, ஓடி உழைக்க வேண்டும். ஊருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் நாங்கள் செயல் பட்டு வருகிறோம். ஒரு தடவை தே.மு.தி.க.விற்கு வாய்ப்பு தாருங்கள், மாற்றிக்காட்டுகிறோம் என்று கூறுகிறோம்.
என் கட்சிகாரன் தவறு செய்தால் விடமாட்டேன். தே.மு.தி.க. தமிழகத்தில் நம்பர் ஒன் கட்சியாக மாறும். அன்று ஒரு எம்.எல்.ஏ. இன்று 29 எம்.எல்.ஏ.க்கள். நாளை இன்னும் வளரும்.
மீனவர் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினேன். ஆனால் இன்றுவரை மீனவர்கள் பிரச்சனை தீரவில்லை. இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய - மாநில அரசுகளால் தடுக்க முடியவில்லை.
மகாத்மா காந்தி ரத்தம் சிந்தி சுதந்திரம் வாங்கி கொடுத்தார். இன்று ஊழல்தான் எங்கும் உள்ளது. ஏழை தாய்மார்களிடம் தாங்கும் சக்தி உள்ளது. லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளுக்குதான் வாங்கும் சக்தி உள்ளது. என்னிடம் ஆட்சி பொறுப்பை கொடுத்து பாருங்கள் நிச்சயம் நல்லது செய்வேன். நான் வாழ்வது மக்களுக்காகதான்.
24 மணிநேரம் தடையில்லா மின்சாரம், குடிநீர், டாக்டர் வசதி கிடைக்க செய்வேன். உங்கள் வீட்டை சுத்தம் செய்வது போல உள்ளாட்சியை சுத்தம் செய்ய தே.மு.தி.க.வுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.