பேருந்து கட்டணக் குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இருப்பினும் மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் அது குறித்து பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்திய மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் நல சங்கத்தின் சட்ட ஆலோசகர் ஏ.டி.ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது மனுவில், கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தமிழக அரசு சுமார் 60 சதவிகிதம் அளவுக்கு பேருந்து கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டது. தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானதால் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் நடத்தை விதி மீறல் நடைபெற்றிருப்பதாக கூறி தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் புகார் செய்தனர்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து தலைமைச் செயலரிடம் இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது. தலைமைச் செயலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால் அவரது விளக்கத்தை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்து விட்டது. மீண்டும் பழைய கட்டணத்தை அமல்படுத்தும்படி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மே 4ஆம் தேதி முதல் பழைய கட்டணம் அமல்படுத்தப்பட்டது.
பேருந்து கட்டணத்தை அரசு குறைத்ததை ஏழை எளிய மக்கள் வரவேற்றார்கள். அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் பேருந்து கட்டணத்தை மீண்டும் உயர்த்தியது அவர்களுக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியது. மே 13ஆம் தேதி மீண்டும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரி தலைமைச் செயலர், போக்குவரத்து துறை செயலர், போக்குவரத்து நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு மனு செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே மீண்டும் கட்டண குறைப்பை அமல்படுத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று சென்னை உயர் நீதிமன்றம் திறக்கப்பட்டதை அடுத்து, தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி டி. முருகேசன் ஆகியோரை கொண்ட முதலாவது அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, பேருந்து கட்டணக் குறைப்பு என்பது அரசின் கொள்கை முடிவாகும். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. இருப்பினும் மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதால் ஏற்கனவே மனுதாரர் கோரிக்கையை அரசுக்கு அனுப்பியிருந்தார். அது குறித்து பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டு கொண்டு மனுவை பைசல் செய்தனர்.