புதுச்சேரி மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்க கோரி வழக்கு
வியாழன், 22 ஜூலை 2010 (09:21 IST)
புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் வல்சராஜ் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வல்சராஜ், இந்திய மருத்துவ கவுன்சில், முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிக்க புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியை 2 முறை ஆய்வு செய்தது. பின்னர் சில குறைகள் இருப்பதாக தெரிவித்து அனுமதி வழங்க மறுத்தது.
இது குறித்து மத்திய சுகாதாரத் துறையிடம் பேசும்போது, மருத்துவ கவுன்சிலின் ஆய்வுப் பணிகள் ஜூலை 15ஆம் தேதியுடன் முடிந்தது என்றனர். மருத்துவக் கல்லூரியில் நூலகம் 1600 சதுர மீட்டரில் இருக்க வேண்டுமாம். இப்போது 566 சதுர மீட்டர் தான் உள்ளது. மாணவர் தங்கும் விடுதியில் உள்ள உணவகத்திலும் குறைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே கருவிகள் முறையாக பொருத்தப்படவில்லை என்றும், 80 சதவீதம் படுக்கை வசதி இல்லை என்றும், ஆய்வின்போது பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் சிசேரியன் அறுவை சிகிச்சைகள் நடக்கவில்லை என்றும், செவிலியர்கள் அன்று குறைவாக இருந்ததாகவும் குறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுமதி கிடைக்காததற்கு அரசுத் தரப்பில் எந்த குறையும் இல்லை. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு தேவையான அனைத்தும் சரியாக உள்ளது. முதலில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 70 சதவீதம் படுக்கை வசதி இருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் 74 சதவீதம் படுக்கை வசதி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. 80 சதவீதம் வேண்டும் என்று மருத்துவ கவுன்சில் குறையாக தெரிவித்துள்ளது என்று வல்சராஜ் கூறினார்.