பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட தடை கோ‌ரி வழ‌க்கு

செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (10:27 IST)
WD
பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க கோ‌ரி மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ‌கிளை‌யி‌ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியை சேர்ந்த சுரேஷ்குமார் எ‌ன்பவ‌ர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வில் நானும் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன். ஒவ்வொரு தேர்வுக்கான கேள்விகளுக்கும், விடைகள் தனியாக தயாரிக்கப்பட்டு தேர்வுத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும். தற்போது தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது.

இயற்பியல் தேர்வுக்கான விடைகளில் ஒரு மதிப்பெண் கேள்வியான 10-வது கேள்விக்கான விடை, 5 மதிப்பெண் கேள்வியான 60-வது கேள்விக்கான விடை, 10 மதிப்பெண் கேள்வியான 68-வது கேள்விக்கான விடை ஆகியவை தவறாக தயாரித்து அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அரசு தேர்வுத்துறை தனது கடமையை சரியாக செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

தவறான விடைகளை கொண்டு இயற்பியல் தேர்வுக்கான விடைத்தாள்களை திருத்தினால் 25 சதவீத மாணவர்கள் தோல்வி அடையும் நிலை ஏற்படும். எனவே இயற்பியல் தேர்வில் கேள்வி எண்கள் 10, 60, 68 ஆகியவற்றுக்கான விடைகள், தேர்வுத்தாள்களை திருத்தும் ஆசிரியர்களுக்கு சரியாக அளிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.

சரியான விடைகளை அளிக்க உத்தரவிட வேண்டும். அதுவரை இயற்பியல் தேர்வுத்தாள்களை திருத்தவும், பிளஸ்-2 தேர்வு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்