பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 7ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை பூர்வீக பாசனப் பகுதிகளுக்கு சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து வரும் 7ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா ஆணை பிறப்பித்துள்ளார். இதனால், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 1,36,109 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.