பரமக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கைக்கு வலியுறுத்தல்

திங்கள், 12 செப்டம்பர் 2011 (15:09 IST)
தமிழக சட்டப்பேரவையில் இன்று பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது போலீசார் மீது நடவடிக்கை தேவை என்று உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.

புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், "சமூக நீதிக்கு போராடி உயிர்நீத்த இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அமைச்சர் உதயகுமார், தமிழக அரசு டெல்லி பிரதிநிதி அசோகன் ஆகியோர் பங்கேற்று இருக்கிறார்கள். இதுபோல் ஏராளமானோர் அங்கு சென்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

முதலில் வெறும் 50 பேர்தான் நின்றுள்ளனர். வருபவர்களை உடனுக்குடன் போலீசார் அப்புறப்படுத்தாததால் கூட்டம் அதிகரித்துள்ளது.பிரச்சினை ஏற்பட்ட பிறகு போலீசார் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இளையான்குடி, மதுரை, பரமகுடி ஆகிய 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

இது ஒரு இனக்கலவரம் அல்ல. சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் காவல் துறையினர் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அதை விடுத்து சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டதால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணமான காவல் துறையினர் தண்டிக்கப்பட வேண்டும். எப்போதும் இதுபோன்ற துப்பாக்கி சூட்டில் தாழ்த்தப்பட்டவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். இது குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.

பா.ம.க. உறுப்பினர் கணேஷ் குமார் பேசுகையில், "நடந்த சம்பவத்தால் தென் மாவட்டங்களில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அவசியம்தான் என்றாலும் மனித உயிர்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். போலீசார் இந்த விஷயத்தில் நிதானமாக நடந்து கொள்ளாமல் துப்பாக்கி சூடு நடத்தியது சரி அல்ல. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை" என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த குணசேகரன் கூறுகையில், "நேற்று நடந்த சம்பவத்தில் போலீசார் இப்படி நடந்து கொண்டது சுதந்திரமில்லை. ஒரு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியின் போது ஜான்பாண்டியனை கைது செய்தது போலீசாரின் புத்திசாலிதனமான நடவடிக்கை இல்லை.அதனால் தான் இந்த பிரச்சினை ஏற் பட்டுள்ளது" என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சவுந்தர்ராஜன் பேசுகையில், "ஜான்பாண்டியன் இறந்த மாணவன் வீட்டுக்கு செல்லவேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரை அந்த வீட்டுக்கு பாதுகாப்பாக அழைத்து சென்று இருக்கலாம். அதை விட்டு விட்டு கைது செய்தது தவறு. இந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உண்மையில் இது சாதிக் கலவரம் அல்ல. இதை மற்றவர்கள் பயன்படுத்தாமல் தடுக்கவேண்டும். காவல் துறையினருக்கு சுதந்திரம் வேண்டும் என்பதை இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்தக்கூடாது" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்