நெருங்கிப் பழகி ரூ.4 கோடியை ஏமாற்றிய புதுமுக நடிகை

செவ்வாய், 3 டிசம்பர் 2013 (11:00 IST)
FILE
புதுமுக நடிகை மீது, தொழில் அதிபர் ஒருவர் திடுக்கிடும் புகாரை கொடுத்துள்ளார். திருமணம் செய்வதாக ஏமாற்றி, ரூ.4 கோடியை ஏமாற்றி விட்டதாக, அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். தொழில் அதிபரான இவர், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நேற்று இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், அவர் கூறியிருப்பதாவது, எனது முதல் மனைவி ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, இறந்து போனார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சினிமா புதுமுக நடிகை ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

அவரை வைத்து படம் எடுக்க நான் ரூ.20 லட்சம் செலவழித்தேன். அவரும் என்னை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு, நெருக்கமாக பழகினோம். கணவன்-மனைவி போல வாழ்ந்தோம்.

தற்போது அந்த நடிகை என்னைவிட்டு, பிரிந்து சென்று விட்டார். என்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுக்கிறார். அவர் என்னிடம் ரூ.4 கோடி அளவுக்கு பணம், சொத்துக்கள், மற்றும் நகைகளை சுருட்டிவிட்டார். அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்