தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து, மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு எதிராக மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கனகசபை, தமிழக அரசின் சார்பில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி 100 இடங்களுடன் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு கடந்த 4 மாதங்களில் 3 முறை இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் இந்தக் கல்லூரியை ஆய்வு செய்தனர்.
விடுதி உள்பட கட்டடக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி மறுத்தனர். எம்.பி.பி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு சென்னையில் வரும் 25ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.