த‌மிழக‌த்த‌ி‌ல் புதிதாக 35 லட்சம் வாக்காளர்க‌ள் விண்ணப்பம்: நரே‌ஷ் கு‌ப்தா!

செவ்வாய், 2 செப்டம்பர் 2008 (10:29 IST)
'தமிழகத்தில் 35 லட்சம் புதிய வாக்காளர்கள், பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்தார்.

இதுகுறித்து தலைமை செயலகத்தில் செ‌‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூ‌றிய அவ‌ர், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியுடன் முடிந்தது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 35 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளில் இது 13, 15 லட்சமாக இருந்தது. இந்த விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் வாக்காளர்களாக சேர்க்கப்படுவார்கள்.

கிராமங்களில் வீடுகளுக்கு எண்கள் சரியாக இல்லாததால், பட்டியல் சரிபார்க்கும் பணியில் சிரமம் ஏற்படுகிறது. வாக்காளர் பெயர் 2 இடத்தில் இருந்தால் அவை கம்ப்யூட்டர் மூலம் கண்டறிந்து அகற்றப்படும். வாக்குச் சாவடிகள், குறிப்பிட்ட அலுவலகங்கள், கல்லூரிகள், மின்னணு பதிவு மூலம் இவை பெறப்பட்டன. மின் பதிவு மூலம் 10,500 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றில் தகுதியானவை 6,700.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் இறுதி பட்டியல் தயாரிக்கும் பணி முடிந்து செப்டம்பர் 3வது வாரத்தில் வெளியிடப்படும். தமிழகத்தின் மக்கள்தொகை விரைவில் 6.6 கோடியாக உயர இருக்கிறது. இதில் 65 ‌விழு‌க்கா‌ட்டின‌ர் வாக்காளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி மீண்டும் அக்டோபரில் தொடங்கும்.

நடிகர் விஜயகாந்த்துக்கு முரசு சின்னம் ஒதுக்குவது பற்றி நான் முடிவு செய்ய முடியாது. அது, அவரது கட்சி பெறும் வாக்குகள் மற்றும் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் எண்ணிக்கை போன்ற பல்வேறு விஷயங்களின் அடிப்படையில், மத்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டிய முடிவாகும் எ‌ன்று நரே‌ஷ்கு‌ப்தா கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்