சென்னைக்கு என்று குறிப்பாக தீவிரவாத அச்சுறுத்தல் ஒன்றும் இல்லை என்று தெரிவித்த காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் முன் எச்சரிக்கையானது என்றார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை நகரில் பல்வேறு முன் எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அதன் ஒரு பகுதியாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகை கடந்த 2 நாட்களாக நடந்தது என்றும் கூறினார்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று நடந்தது என்று தெரிவித்த ஆணையர், இதில் ஓட்டல்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து எடுத்து கூறினோம். அவர்களும் காவல்துறை மூலம் எதிர்பார்க்கும் உதவிகள் பற்றி கோரிக்கை வைத்தனர் என்றார்.
கூட்டத்தில் அனைத்து ஓட்டல்களிலும் 3டி மாடல்ஸ் எனப்படும் அதிநவீன சாப்ட்வேர் கட்டட வரை படங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினோம் என்றும் இந்த வரைபடம் மூலம் கட்டடத்தின் ஒவ்வொரு தளத்தையும் அதில் உள்ள அறைகளின் அமைப்பு போன்றவற்றை தனித்தனியாக பிரித்து ஆய்வு செய்ய முடியும் என்பதை எடுத்து கூறி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
சென்னைக்கு என்று குறிப்பாக தீவிரவாத அச்சுறுத்தல் ஒன்றும் இல்லை என்று தெரிவித்த ஆணையர், காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் முன் எச்சரிக்கையானது என்றார்.
அனைத்து ஓட்டல்களும் உடனடியாக தகவல் பெறும் வகையில் தனி காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறிய ஆணையர், அதே போல் ஓட்டல் துறையை சேர்ந்த ஒரு நபரும் இதில் இடம் பெறுவர். அனைத்து ஓட்டல்களிலும் காவல்துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என ஓட்டல் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர் என்று தெரிவித்தார்.
ஓட்டல்களுக்கு தேசிய கமாண்டோ பாதுகாப்பும் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவித்த ஆணையர் ராஜேந்திரன், கமாண்டோ படை அதிகாரி இதுகுறித்து ஆய்வு மேற்கொள்வார் என்றும் பாதுகாப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வணிக வளாகங்கள், மசூதிகள், வழிபாட்டு தலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.