கொலை வழக்கில் சிக்கிய வக்கீல் மனைவி பெங்களூரிலும் கைவரிசை!

புதன், 1 ஜனவரி 2014 (13:31 IST)
FILE
பலகோடி ரூபாய் மோசடி செய்த தனது மனைவி மோகனாவைக் காப்பாற்ற அம்மாசை என்ற பெண்ணைக் கொலை செய்து அது தன் மனைவி மோகனாதான் என்று நாடகமாடிய கோவை வக்கீல் ராஜவேலுவின் மனைவி மோகனா மேலும் பல மோசடிகளில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வக்கீல் ராஜவேலுவின் மனைவி மோகனா ஒடிசா மாநிலத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி 12 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவானார். இந்த மோசடியிலிருந்து தப்பிக்க வைக்கத்தான் வக்கீல் ராஜவேலு அம்மாசை என்ற அப்பாவிப் பெண்ணைக் கொன்று இறந்தது தன் மனைவி மோகனா என்று நாடகமாடினார்.

இறந்தது தனது மனைவி மோகனா என்று போலி இறப்பு சான்றிதழ் பெற்று மின்மயானத்தில் எரித்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மணிவேலு கொலை வழக்கிலும் ராஜவேலு முக்கிய பங்கு வகித்துள்ளார். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வக்கீல் ராஜவேலுவின் மனைவி மோகனா 2012-ம் ஆண்டு பெங்களூர் அடுக்குமாடி கட்டிட விற்பனையில் பல லட்சம் மோசடி செய்து கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறைக்கு சென்ற விவரம் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்