கைது பயத்தில் முன்ஜாமீன் வாங்கிய கடலை வியாபாரி
புதன், 16 ஜனவரி 2013 (10:37 IST)
FILE
ரூ.28 ஆயிரம் கோடி மதிப்புள்ள அமெரிக்கா பத்திரம் வைத்துள்ள தன்னை கைது செய்து விடுவோர்களோ என்ற பயத்தில் முன்ஜாமீன் கோரிய கடலை வியாபாரி ராமலிங்கத்தை வரும் 21ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த உப்புதுறைபாளையத்தை சேர்ந்த நிலக்கடலை மற்றும் கொப்பரை வியாபாரி ராமலிங்கம் வீட்டில் இருந்து ரூ.28 ஆயிரம் கோடி மதிப்பிலான அமெரிக்க பத்திரங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பத்திரங்களின் உண்மை தன்மை குறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக ராமலிங்கத்திடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 4ஆம் தேதி அதிகாரிகள் விசாரித்தனர். மீண்டும் 11ம்தேதி விசாரணைக்கு வரும்படி கூறியிருந்தனர். ஆனால் அன்று விசாரணை நடைபெறவில்லை. பின்னர் அறிவிக்கும் தேதியில் வந்தால்போதும் என அதிகாரிகள் கூறிவிட்டனர்.
இந்த நிலையில், வரும் 11ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்போது, வருமான வரித்துறையினர் தன்னை கைது செய்யலாம் என ராமலிங்கம் சந்தேகித்தார். 12 முதல் 16ம் தேதி வரை பொங்கல் விடுமுறை என்பதால் முன்எச்சரிக்கையாக 11ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு செய்தார்.
அவரை வரும் 21ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து, உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியதாக ராமலிங்கத் தின் வழக்கறிஞர் இளங்கோ தெரிவித்தார்.
எனவே, 21ம் தேதிக்கு பிறகுதான் ராமலிங்கத்தின் மீது வருமான வரித்துறையினர் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பது தெரியவரும்.
இதனிடையே, ராமலிங்கத்தின் சொத்து மற்றும் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கிவிட்டனர். பொங்கல் பண்டிகை தினத்தன்று நகைகளை வைத்து ராமலிங்கம் குடும்பத்தினர் வழிபடுவது வழக்கமாம். ஆனால் நகை பணம் எதுவுமின்றி பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டதாக ராமலிங்கம் வேதனையுடன் தெரிவித்தார்.