டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் 200 கேள்விகளில் 105 கேள்விகள் மட்டுமே அச்சாகி இருந்தது என்றும் 95 கேள்விகள் அச்சாகவில்லை என்றும் தர்மபுரி மாவட்டம், முருக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த எம்.சின்னசாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் தேர்வு முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 718 அரசு பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி குரூப்-4 தேர்வுக்கு அறிவிப்பு வெளியிட்டது. இதனடிப்படையில், இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்தேன்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிநாயக்கனஹள்ளியில் உள்ள தனியார் கல்லூரி தேர்வு மையம் எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வு மையத்தில், 7.7.2012 அன்று எழுத்து தேர்வு எழுத சென்றேன். எனக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 200 கேள்விகளில், 60வது கேள்வி முதல் 153வது கேள்வி வரையிலான கேள்விகள் அச்சாகவில்லை. 200 கேள்விகளில், வெறும் 105 கேள்விகள் மட்டுமே அச்சாகி இருந்தது. 95 கேள்விகள் அச்சாகவில்லை.
இதனால் இந்த 95 கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. இதுகுறித்து தேர்வு அறை மேல்பார்வையாளரிடம் புகார் செய்தேன், ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார். இந்த கேள்வித்தாள் குறைபாடுகள் குறித்து, டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு பல புகார் கடிதம் அனுப்பினேன்.
மேலும், குரூப்-4 தேர்வு எனக்கு மட்டும் நடத்த வேண்டும் என்றும், பல கோரிக்கை மனுவை 19.7.2012 அன்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளரிடம் கொடுத்தேன். அந்த மனு பரிசீலனையில் உள்ளது. இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. அச்சிட்ட கேள்வித்தாள்கள் குறைபாடுகளுடன் இருந்ததால், வேலைபெறும் என்னுடைய உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குரூப்-4 தேர்வு குறித்து 27.4.2012 அன்று வெளியிட்ட அறிவிப்பையும், 7.7.2012 அன்று நடந்த தேர்வையும் ரத்து செய்யவேண்டும். குரூப்-4 தேர்வை மீண்டும் நடத்த டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். 7.7.2012 அன்று நடந்த குரூப்-4 தேர்வின் முடிவினை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, 7.7.2012 அன்று நடந்த குரூப்-4 தேர்வின் முடிவினை வெளியிட இடைக்கால தடை விதித்ததோடு, மனுவுக்கு டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் உத்தரவிட்டார்.