கள்ளக்காதல் தகராறில் பெண் போலீஸ் கொலை; கொலையாளி கைது

வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (11:37 IST)
FILE
பெண் போலீசை கழுத்து நெரித்துக் கொலை செய்த கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள துலுக்கன்குறிச்சியை சேர்ந்தவர் லட்சுமி. இவரது மகள் சமுத்திரகனி (34). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கீழராஜகுலராமன் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வந்தார். ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் தெருவில் லட்சுமியின் அண்ணன் குருபாண்டியன் வசித்து வருகிறார். இவரது மகன் செந்தில்குமார் (35). திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

சமுத்திரக்கனிக்கும், அத்தை மகன் செந்தில்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்யாமலேயே வ.உ.சி. நகரில் வசித்து வந்தனர். நேற்றுமுன்தினம் மாலை இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக, வாக்குவாதம், சண்டை ஏற்பட்டது. அப்போது சமுத்திரகனியின் கழுத்தை நெரித்து, செந்தில்குமார் கொலை செய்துவிட்டு வெளியே சென்றார்.

பின்னர், இரவு 10 மணிக்கு ‘மனைவி உடல்நலம் சரியில்லாமல் மயங்கி கிடக்கிறார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும்‘ என ஒரு ஆட்டோ பேசி வ.உ.சி.நகர் வீட்டுக்கு செந்தில்குமார் வந்தார். இருவரும் மாடிக்கு சென்றனர். அப்போது சமுத்திரக்கனி இறந்து கிடந்தது கண்டு ஆட்டோ டிரைவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் விரைந்து சென்று கொலையான சமுத்திரக்கனியின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார். இதில் சமுத்திரக்கனி கீழராஜகுலராமன் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றியது தெரியவந்தது. இதையடுத்து செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்