''தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ‘ஓணம்‘ திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
WD
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ''சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு, மலையாள மொழி பேசும் அனைத்துத்தரப்பு மக்களாலும் உவகையுடனும், உற்சாகத்துடனும் கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் திருநாள் ஆகும்.
கேரள மாநில மக்களின் பண்பாட்டுச் சிறப்பை உணர்த்தும் நாளாகவும், அறுவடைத் திருநாளாகவும், மகாபலி சக்ரவர்த்தியை அன்புடன் வரவேற்று உபசரிக்கும் நாளாகவும், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை எடுத்துரைக்கும் நாளாகவும் ஓணம் திருநாள் அமைந்துள்ளது.
ஓணம் பண்டிகையை மதச்சார்பற்ற பண்டிகை என்று சொன்னால் அது மிகையாகாது. மனம் நிறைந்த மகிழ்ச்சியையும், வளம் நிறைந்த வாழ்வையும் ஒவ்வொரு இல்லத்துக்கும் ‘ஓணம்‘ வழங்கட்டும்!
இந்த நன்னாளில் மலையாள மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தமிழகத்தில் வாழும் மலையாள மக்கள் அனைவருக்கும் எனது இனிய ‘ஓணம்‘ திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.