உலகம் வெப்பமயமாதலை தடுக்க கடைகளிலும், வீடுகளிலும் வணிகர்கள் இன்று இரவு 9 நிமிடம் விளக்கை அணைக்க வேண்டும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
WD
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் வெப்பமயமாதல் என்பது நம் பூமியை அச்சுறுத்தும் மிக மோசமான பிரச்சனை ஆகும்.
இது பற்றி விழிப்புணர்வு உண்டாக்க சுற்றுச்சூழல் இயக்கமான எக்ஸ்னோரா இண்டர்நேஷனல், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், சென்னை மாநகராட்சி உள்பட பல்வேறு தொண்டு நிறுவனங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் `99999 விளக்கை அணை-நம் வாழ்வில் ஒளி தொடர' என்ற நிகழ்ச்சியை நடத்த முடிவு எடுத்துள்ளனர்.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் ஆதரவை தெரிவிக்கிறது. சென்னை மாநகரத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும், கடைகளும் இன்று இரவு 9 நிமிடம் விளக்கை அணைத்து விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ஆதரவு தெரிவிக்க உள்ளோம்.
அனைத்து வணிகர்களும் இப்பிரசாரத்துக்கு வலுசேர்க்கும் விதத்தில் இன்று 9 மணிக்கு தங்கள் கடைகளிலும், வீடுகளிலும் மின் விளக்குகளை அணைத்து தொடர்ந்து 9 நிமிடங்கள் வரை அணைத்து ஆதரவு தர வேண்டுகிறோம். அந்த சமயத்தில் கடைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து கொள்ளலாம்'' என்று வெள்ளையன் கேட்டுக் கொண்டுள்ளார்.