கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடி வரும் உதயகுமாரை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தட்டிக் கேட்டிருந்தால் இப்போது கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட்டு கொண்டிருக்கும் என்றும் இதன் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகி இருக்கும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக முதல்வரை அதிக நேரம் பேச விடவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி கொடும்பாவியை எரித்து அ.தி.மு.க.வினர் அநாகரீமாக நடந்து கொண்டார்கள். இதை நாங்கள் திருப்பி செய்ய எவ்வளவு நேரம் ஆகும்? அந்த செயலை நாங்கள் செய்ய மாட்டோம்.
தமிழக முதல்வருக்கு தமிழகத்தில் மட்டும்தான் பிரச்சனை. ஆனால் பிரதமருக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பிரச்சனையை தீர்க்க வேண்டும். யாரையும் ஒதுக்கவோ, வெறுக்கவோ, மத்திய அரசின் எண்ணம் அல்ல.
தமிழ்நாட்டில் இன்று மின்பற்றாக்குறை நிலவி வருகிறது. கூடங்குளம் அணுமின்நிலையத்தை எதிர்த்து போராடி வரும் உதயகுமாரை ஆரம்பத்திலேயே தமிழக அரசு தட்டிக் கேட்டிருந்தால் இப்போது கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட்டு கொண்டிருக்கும். இதன் மூலம் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகி இருக்கும்.
தமிழகத்தில் நிலவி வரும் வறட்சியால் விவசாயிகள் பலியாகி வருகிறார்கள். இவர்களுக்கு தி.மு.க. நிவாரண உதவி வழங்கி உள்ளது. விஜயகாந்தும் உதவிதொகை வழங்கி உள்ளார். காங்சிரசும் ஆறுதல் கூறி உள்ளது. ஆனால் அ.தி.மு.க. இதுவரை என்ன செய்தது என்று இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.