இலங்கைத் தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை

வெள்ளி, 1 ஜனவரி 2010 (18:03 IST)
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் முடிந்து நிலையிலும் கூட, அந்நாட்டில் உள்ள தமிழர்கள் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.

இலங்கையில் தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த போர் கடந்த மே மாதம் முடிவு பெற்றது. உள்நாட்டுப் போர் நடந்த போது உயிருக்கு பயந்து அங்கு வாழ்ந்த தமிழகர்கள் பலர் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அதிகளாக இடம்பெயர்ந்தனர்.

போர் முடிந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அங்குள்ள முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளதாகவும், சித்ரவதை செய்யப்படுவதாகவும் குற்றச்சாற்று எழுந்தது. இதனை அறிய தமிழக எம்.பி.க்கள் குழு இலங்கை சென்றது.

ஆனாலும் போர் முடிந்த பிறகும் அங்குள்ள நெருக்கடி காரணமாக தொடர்ந்து அகதிகள் வந்த வண்ணம் இருந்தனர். கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி கடைசியாக நார்வே நாட்டை சேர்ந்த இலங்கை அகதி சிவபாலச்சந்திரன் என்பவர் வந்தார். அதன் பிறகு தமிழகத்திற்கு இலங்கை அகதிகள் யாரும் வரவில்லை.

இந்நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவன், ஒரு சிறுமி ஆகிய 5 பேர் முகுந்தராயர் சத்திரம் அரிச்சமுனை கடற்கரைக்கு அகதிகளாக வந்திறங்கினர்.

தகவலறிந்ததும் கடலோர காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் விரைந்து சென்று அவர்களை தனுஷ் கோடி காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தனர். விசாரணையில் அவர்கள் கிளிநொச்சியை சேர்ந்த ராஜ்குமார் (60), வினிதா (30), அவரது மகன்கள் சவசியான் (11), எமிசன் (5), மகள் நீராவினி (9) என்று தெரியவந்தது. அவர்களது பெயரை பதிவு செய்த காவலர்கள் அவர்களை மண்டபம் அகதிகள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்