இரயிலை கடத்தியவன் விவரம் தெரிந்தது!

புதன், 24 ஜூன் 2009 (21:05 IST)
சென்னை செண்ட்ரல் புறநகர் இரயில் நிலையத்திலிருந்து மின்சார இரயிலை ஓட்டிச் சென்று சரக்கு இரயிலுடன் மோதவிட்ட நபரின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

ஏப்ரல் 29ஆம் தேதி அதிகாலை சென்னை செண்ட்ரல் புறநகர் இரயில் நிலையத்தில் திருவள்ளுக்குப் புறப்படத் தயாராக நின்றுக் கொண்டிருந்த மின்சார தொடர் வண்டியை இயக்கி ஓட்டிச் சென்ற நபர், அதனை மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் செலுத்திச் சென்று ஜீவா இரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு இரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாக்கினான்.

சரக்கு இரயிலுடன் மோதுவதற்கு முன்னர் தான் ஓட்டிச் சென்ற மின்சார இரயிலில் இருந்து குதித்த அந்த நபர் படுகாயமுற்று இறந்துள்ளான். முகம் சற்று சிதைந்த நிலையில் இருந்த அந்த நபர்தான் இரயிலை கடத்திச் சென்றவன் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவன் யாரென்று தெரியாத நிலையில் அவனுடைய கையில் நாகராஜூ என்று பச்சை குத்தியிருந்ததை வைத்து அந்த நபர் ஆந்திராவைச் சேர்ந்த நக்ஸலைட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்த காவல் துறையினர் ஒரு குழுவை ஆந்திரத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். ஆனால் எந்த விவரமும் தெரியவில்லை.

இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை செய்து வரும் காவல் துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்த நபரின் புகைப்படத்தை அச்சிட்ட சுவரொட்டியை எல்லா இடத்திலும் ஒட்டி தகவல் அளிக்குமாறு பொது மக்களை கேட்டிருந்தனர்.

அந்த சுவரொட்டியை தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள தடா நகரில் வாழ்ந்து வரும் பெண் ஒருவரும் அவருடைய மகளும் அடையாளம் கண்டுள்ளனர். படத்திலுள்ள நாகராஜூ தனது கணவர்தான் என்றும், அவர் தனது தந்தைதான் என்று அந்தப் பெண்ணின் மகளும் காவல் துறைக்கு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் கூறுவது உண்மைதானா என்றறிய காவல் அதிகாரி ஷாஜஹான் தலைமையிலான குற்றப் புலனாய்வுக் குழு நெல்லூருக்கு விரைந்துள்ளது.

நாகராஜூவின் முகம் விபத்தில் சிதைந்துள்ளதால் அவனுடைய மரபு அணுவைக் கொண்டு சென்று அந்தப் பெண்ணின் மகளுடைய மரபணுவுடன் சோதித்துப் பார்த்து உறுதி செய்ய முடிவெடுத்து குற்றப் புலனாய்வு குழு நெல்லூர் சென்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்