நடிகர் தனுஷ் நடித்துள்ள வேங்கை படம் வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர் நீதிமன்றம் விளக்கியுள்ளது.
நடிகர்கள் தனுஷ், தமன்னா நடித்து ஹரி இயக்கியுள்ள வேங்கை படத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் ஏக சக்கரா நிறுவனத்தின் இயக்குனர் கலைசெல்வம் வழக்கு தொடர்ந்தார்.
அதில், 'ஊலலல்லா' என்ற படத்தை நாங்கள் தயாரித்தோம். 2வதாக 'வேங்கை' என்ற படம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ' வேங்கை' என்ற பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும், தயாரிப்பாளர் கவுன்சிலிலும் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பரில் பதிவு செய்தேன்.
இந்நிலையில் அந்த ஆண்டில் செப்டம்பர் 28ஆம் தேதி எனக்கு தயாரிப்பாளர் கவுன்சிலில் இருந்து தாக்கீது வந்தது. வேங்கை என்ற பெயரை ஏற்கனவே ஸ்ரீ புரடக்சன் நிறுவனம் பதிவு செய்துள்ளதாக அதில் கூறியிருந்தனர். இதற்கு நான் பதில் தாக்கீதும் அனுப்பினேன்.
இந்நிலையில், தனுஷ், தமன்னா நடித்து, இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேங்கை' என்ற பெயர் கொண்ட படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை வெளியிட்டால் எனக்கு பாதிப்பு ஏற்படும். எனவே இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு கடந்த 25ஆம் தேதி விசாரித்த நீதிபதி வி.ராமசுப்ரமணியம், 'வேங்கை' என்ற பெயரில் திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தார்.
இந்த நிலையில் வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'வேங்கை' திரைப்படத்துக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி நீதிபதி வி.ராமசுப்பிரமணியம் உத்தரவிட்டார்.