லாபத்தின் மீது கட்டப்பட்ட சாம்ராஜியங்கள் நொறுங்கி விழட்டும்

சுரேஷ் வெங்கடாசலம்

புதன், 23 செப்டம்பர் 2015 (13:21 IST)
காவல்துறை சகோதரி பிணமாகத் தொங்கினாள்
காதலின் பெயரால் தர்மபுரியில் நமது சகோதரன்  உயிரிழந்தான் 
 
சாதியின் பெயரால் நமது வீடுகள் எரிக்கப்பட்டன
மதத்தின் பெயரால் நமது உறவினர்கள் கொல்லப்பட்டனர்
இப்படியாக எத்தனை எத்தனை உயிர்களை பரி கொடுத்தோம்..


 


தூர தேசத்தில் நமது குழந்தை ஒருவன் கடலில் மூழ்கி துடிதுடித்து இறந்தான்
அவன் கரை ஒதுங்கிக் கிடந்த அந்த அகோர காட்சி
நமது உயிரை உலுக்கியது!...
 
வகை வகையான உணவுகள் இருந்தபோதும்
பசி, பட்டினியில் வாடி வதங்கி,
நமது சொந்தங்கள் மடிந்து கொண்டே இருக்கின்றன...

 
இவ்வுலகத்தின் அனைத்துப் பொருட்களையும் செய்து கொடுக்கும்
நமக்கு உரிய பொருட்கள் கிடைப்பதே இல்லை...
 
போர்கள், கலவரங்கள், கொலைகள், மன உளைச்சல், பசி, பட்டினி,
பண லாபம், அரசியல் லாபம் என்று அவர்களுக்காக
ஆண்டாண்டு காலமாக நமது உயிர்கள் எடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன
 
இத்தனையையும் பார்த்து ரசிக்கும் அவர்கள்..
அதே கண்களால்...

லாபத்தின் மீது கட்டப்பட்ட அவர்களது சாம்ராஜியங்கள்
நமது சம்மட்டியால் அடிபட்டு
நொருங்கி விழுவதை அவர்கள் பார்ப்பார்கள்...
 

நமது உறவு பரந்து விரிந்தது..
ஏற்றத்தாழ்வுகள், இனம், மொழி, தேசங்கள் எல்லாம் கடந்தது..

வலி வேதனையோடு தலைமுறை தலைமுறையாக
இந்த பூமியை 
செப்பனிட்டு,
அத்தனை பொருட்களையும்
தங்கள் கரங்களால் தயாரித்துக் கொடுத்த
வல்லமையால் ஒன்றிணைந்தது..
 

இந்த பூமியின் அரக்கர்கள்
அழிந்து ஒழியட்டும்..
லாபத்தின் மீது கட்டப்பட்ட சாம்ராஜியங்களும்
நொறுங்கி விழட்டும்...



நமது சொந்த துயரங்கள்
நமது சொந்த கரங்களாலே துடைத்தெரியப்படட்டும்!...

வெப்துனியாவைப் படிக்கவும்