அந்தோனி ரோஸ்லினின் அழகிய கவிதைகள்

புதன், 20 ஏப்ரல் 2016 (20:29 IST)
கவிதை : 1 
 
தேடுகிறேன் உன்னை.... 
நல்லது நடக்கையிலும் 
சோகம் சூழும் பொழுதும் 
தேடுகிறேன் உன்னை..... 
புதிய செயல் செய்கையிலும் 
பிறரிடம் வாழ்த்து பெறும் போதும் 
தேடுகிறேன் உன்னை.... 
பல உறவுகள் சூழ்ந்திருந்தாலும் 
ஆத்மார்தமாக உணர்வது உனைத்தானே 
தேடுகிறேன் உன்னை.... 
அருகில் இல்லையென்றாலும் 
என் மனதில் இருப்பது நீயென்றாலும் 
தேடுகிறேன் உன்னை 
 
கவிதை : 2 
 
இருப்பதை பகிர்ந்து ... 
இன்புற்ற நாட்கள்... 
அதிசயமாய் கிடைத்த பொருளை 
அனைவரிடமும் பீற்றிக்கொண்ட நாட்கள்... 
சின்ன சின்ன சண்டைகள் 
சமாதானம் செய்ய ஒரு கூட்டம்... 
ஆட்டம் , பாட்டம் கொண்டாட்டம் 
அத்தனையும் இன்பமான நாட்கள் 
அனைவரின் வாழ்விலும் 
வசந்த நாட்கள்... 
மறக்க முடியா பொக்கிஷ நாட்கள்... 
நினைக்க நினைக்க 
போதை தரும் நாட்கள் 
பாலிய பருவ நாட்கள்... 
 
கவிதை : 3 
 
சின்ன சின்ன சொல்லெடுத்து 
சித்திரமே உன்னை பாட வந்தேன் 
சிங்காரி நீயும் ... 
சிரித்தபடி என் அருகினில் வந்திடடி 
சிம்பிளாக பாடிடுவேன் 
சிவந்தவளே என் அருமை 
சின்னவளே ஆசையோடு அழைக்கின்றேன் 
சிரத்தை கொஞ்சம் நீட்டினால் 
சிவந்த விரலுக்கு 
சின்ன மோதிரம் அணிவிப்பேன் 
சிவப்பு கண்டங்கியில் 
சிணுங்கலுடன் இணைந்த வெட்கத்தை 
சிரித்தபடி ரசிக்கின்றேன் 
சிப்பிக்குள் முத்தை போல் 
சிங்காரி நீ எனக்கு 


















கவிதை : 4 

அடி எடுத்து வைக்கையிலே 
தேடுது உனையே மனம்... 
சோர்ந்து துவளும் பொழுது ... 
எனை நானே தட்டி கொண்டாலும் 
தேடுது உனையே மனம்... 

தூரத்தில் தெரிகின்ற கூட்டத்தில் 
நீ பேசிக்கொண்டிருந்தாலும் 
என்னுடன் இல்லை என்ற கோபமில்லை... 
எனக்கு தான் தெரியுமே 
நீ அங்கிருந்தாலும் 
உன் மனம் என்னிடம் என்று.. 

என் வளர்ச்சியில் உனக்கும் 
உன் வளர்ச்சியில் எனக்கும் 
சந்தோசத்தை தவிர 
வேறு எதையும் எதிர்பாராத 
உள்ளங்களாய் நாம் 


கவிதை : 5 

கள்வனே 
கவிதை தா என்றாய் 
கவிதையா யாருக்கு என்றேன்... 
கள்ளி எனக்கு தான் என்றாய் 
கவிதை எது குறித்து என்றேன் 
கண்ணம்மா உனக்கு தெரியாதா என்றாய் 
கற்பனைகளை கவிதையாக வடித்திடவா 
கனவுகளை கவிதையாக வடித்திடவா 
கள்வனே குழம்பி தவிக்கின்றேன் இதையே 
கவிதையாக வடிக்க 
கவிதை உயிர் பெற்றதே 


கவிதை : 6 


என்னை பார்த்து 
புன்னகைத்த உன் புன்னகையில் 
என்னை மறந்தேன் 
அதை பாசம் என்பதா 
இல்லை நேசம் என்பதா ...... 

நீண்ட நாள் பழகிய உணர்வு 
இரவிலோ தூக்கமில்லை 
உன்னினைவில் விடியலிலே 
ஓடோடி வந்தேன் 
உன்னை காண 

வந்த எனக்கு ஆச்சரியம் 
கைகளில் மல்லிகை பூ ... 
முகமலர்ந்த சிரிப்பில் 
என்னை மறந்து 
சரிந்தேன் உன் கால்களில் 

என்னை தூக்கி உச்சிமுகர்ந்து 
நீ நல்லா இருடியம்மா என்று 
உன் பொக்கை வாயினால் வாழ்த்தியபோது 
என் மனதில் இறந்த என் பாட்டியின் நினைவு.. 






















கவிதை : 7 

என்னவளுக்கு கவிதை 
கவிதையானவளுக்கு கவிதையா 
பேனாவில் எழுதுவதா 
இணையத்தில் எழுதுவதா 
எப்படி வடித்திடினும் 
உனக்கு புரியாது 
வடித்த எழுத்துக்களை விட 
மனதில் வாழும் எழுத்துக்கு அழிவில்லை 
கவிதையே கவித்துவமானவளே 
உன்னை பொத்தி வைப்பேன் 
என்னுள்ளே 
என் உயிர் பிரியும் வரை 


கவிதை : 8 

இருள் தோன்றும் நேரத்தில் 
இருண்டு விடுமோ என 
இமைப்பொழுதில் எழும் எதிர்மறை எண்ணத்தை 
இல்லாமல் ஆக்குவது நீ தானே 
இக்கட்டான நேரத்தில் எதிர்பாராமல்... 
இப்பேதைக்கு அருள் செய்கின்றாயே 
இறைவா இரவாமல் நீ அருள்வதால் 
இறைவா ஆனாயோ 


கவிதை : 9 

அஞ்சனா நீ கெஞ்சினா 
கஞ்சனா இல்லாமல் 
மிஞ்சாமல் உனக்கு 
அஞ்சாமல் தந்துடுவேன் 
அஞ்சனா நீ அஞ்சினால்... 
வஞ்சகம் செய்யாமல் கட்டுவேன் தாலியை... 


கவிதை : 10 

இன்புற்றிருக்கும் காலம் 
எட்ட சென்ற நீ 
கடமைக்குள் சிக்குண்ட இக்காலத்தில்... 
சுத்தி சுத்தி வருகின்றாய் 
இக்காலம் அக்காலமாக 
ஆக்க விரும்பாமல் 
எக்காளமாக மாற்றுகிறேன் 
உன் தீவிர காதலுக்காக 

வெப்துனியாவைப் படிக்கவும்