திருப்பதி திருமலை - சுடர் விடும் சூப்பர்ஸ்டார்

Webdunia

வெள்ளி, 12 அக்டோபர் 2007 (12:08 IST)
webdunia photoWD
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் 108 வைணவத் தலங்களில் மகத்துவம் மிக்க புண்ணியஸ்தலமான திருப்பதி திருமலை கோயில் உருவானது பற்றியும், எம்பெருமான் ஏழுமலையான் பற்றியும் விரிவான தகவல்களுடன் நூல் ஆசிரியர் சந்திரசேகர சர்மாவின் படைப்பாக வரம் பப்ளிகேஷன்ஸின் வெளியீடாக வந்துள்ள நூல் சுடர் விடும் சூப்பர்ஸ்டார்.

இந்தப் புத்தகத்தின் தொடக்கத்தில் திருப்பதி திருமலை பற்றிய முன்னுரையுடன் சுப்ரபாதம் பாடலை 'வேங்கடவா எழுந்தருள்வாய்' என அழகு தமிழில் பாடும் விதமாக கொடுத்துள்ளனர்.

திருப்பதி திருமலை தோன்றிய புராணக்கதையை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லிய விதம் சிறப்பு.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடைப்பயணமாக மலையேறும் பக்தர்கள் எப்படி செல்ல வேண்டும், நடைப்பாதையில் பக்தர்களுக்கு உள்ள வசதிகள், நடைப்பயணம் தொடங்கும் முன் நீராட வேண்டிய தீர்த்தம், பிறகு வழிபட வேண்டிய பகவான், செல்லும் வழியில் தரிசிக்க வேண்டியவை, மண்டபம், கோபுரம், ஆலயம் என ஒவ்வொன்றையும் அடைந்து மேலேறி வந்தால் கோயில்... என நாம் படிக்கும்போதே நம் கண் முன் ஜொலிக்கிறது திருமலை.

அதன் பிறகு பாவங்கள் போக்கும் புண்ணிய தீர்த்தங்கள், தீர்த்தங்களில் நீராடும் முறை, தீர்த்தங்களின் வகைகள் பற்றியும் விரிவாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.

திருமலையில் அடிவைத்ததும் வெள்ளி வாசல் வழியே நுழைந்தால் விமான பிரதட்சிணம், தங்கக் கிணறு, தங்க விமான தரிசனம் என ஒவ்வொன்றையும் கடந்து வந்தால் ஏழுமலையான் சந்நதிக்குள் நுழையுமுன் கடந்து செல்ல வேண்டிய மூன்று அரங்கங்கள், அதன் பிறகு நமக்கு கிடைக்கும் ஏழுமலையான் தரிசனத்தை நாம் படிக்கும்போதே பெற்று விடுகிறோம்.

ஏழுமலையான் தரிசனம் முடிந்து வெளிவரும்போது மண்டபங்கள், கோயில்கள், சம்பங்கி பிரதட்சிணம், கிருஷ்ண தேவராயர் மண்டபம், திருமலை ராயர் மண்டபம், அயினா மஹால், துவஜஸ்தம்ப மண்டபம், ஸ்ரீ வரதராஜசுவாமி கோயில், ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி, ஸ்ரீ நரசிம்மசுவாமி சந்நிதி, ஸ்ரீ கருட சந்நிதி, ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சந்நிதி என நாம் காண வேண்டிய, தரிசிக்க வேண்டிய அனைத்து சந்நிதி விவரங்களையும் தெளிவாகக் கொடுத்துள்ளார்.

திருப்பதி திருமலை ஏழுமலையானை நாம் தரிசிக்கும் முன் திருச்சானுரில் உள்ள பத்மாவதி தாயாரை தான் முதலில் தரிசிக்க வேண்டும் என்று அந்தக் கோயில் பற்றிய விவரங்களையும் ஆசிரியர் கொடுத்துள்ளார். பத்மாவதி தாயாரை தரிசித்த பிறகு திருமலைக்கு சென்று பெருமாளை தரிசிப்பதால் விசேஷ பலன் கிடைக்கும் என்றும் சொல்லியுள்ளார்.

திருச்சானுர் கோயிலில் பத்மாவதி தாயாருக்கு செய்யப்பட்டும் அர்ச்சனை, ஊஞ்சல் சேவை, தரிசனம், சேவை கட்டணங்கள் அனுமதிக்கப்படும் நபர்கள் பற்றிய விவரங்களையும் தந்துள்ளார்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் தீவிர பக்தர் அன்னமாச்சார்யா பற்றிய வாழ்க்கை வரலாற்றையும், அவர் பக்திப்பாடல்கள் இயற்றி அதன் மூலம் சேவை செய்த விவரங்களையும் விளக்கமாகத் தந்துள்ளார்.

திருப்பதி குடை, உண்டியல், லட்டு, புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி விரதம், ஏகாதசியின் சிறப்பு பற்றிய விவரங்களையும் தந்துள்ளார் ஆசிரியர்.

திருமலை திருப்பதியில் தங்குவதற்கு சிறப்பான பயணியர் மாளிகை, திருமலை மீது பக்தர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள், திருப்பதி பெருமாளுக்கு முடி காணிக்கை கொடுப்பது ஏன்? என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார்.

இறுதியில் திருப்பதி வழியெங்கும் சொல்லிக் கொண்டு போக ஸ்ரீ கோவிந்த நாமாவளி, எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய 'குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...' பாடலில் நம்மை அமைதிப்படுத்தி, மகிழ்ச்சிப்படுத்தி, ஒரு புதிய அனுபவம் தந்து இப்புத்தகம் முடிகிறது.

மொத்தத்தில் திருப்பதி திருமலை செல்லும் பக்தர்கள் அவசியம் வாங்க வேண்டிய, படிக்க வேண்டிய, தெரிந்து கொள்ளவேண்டிய, பாதுகாக்க வேண்டிய சிறந்த புத்தகம்.

இவ்வளவு தகவல்களையும் தெளிவாகவும், படிக்கும் விதமாகவும், சுவாரஸ்யமாகவும் கொடுத்துள்ள ஆசிரியருக்கும், வெளியிட்ட பதிப்பகத்துக்கும் பாராட்டுக்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்