சரியான பணி அனுமதி இல்லாமல் தனது நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேரை திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது குவைத் அரசு. இதில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் அடங்குவர்.
குவைத் நாட்டின் மொத்த மக்கள் தொகையே 35 லட்சம்தான். இதில் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் வெளிநாடுகளில் இருந்து அங்கு குடியேறி வேலை செய்பவர்கள் ஆவார்கள். இந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள், அங்கு அலுவலகமோ, வர்த்தக நடவடிக்கைகளோ இல்லாத தனியார் நிறுவனங்கள் பணத்துக்காக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வேலை செய்ய அனுமதி கடிதம் கொடுத்து, அதன் மூலம் குவைத் நாட்டுக்கு ஏராளமான தொழிலாளர்களை அழைத்து வந்துள்ளது. அவர்களுக்கு வேலை தரவோ, அதற்கான உத்தரவாதம் அளிக்கவோ அந்த நிறுவனங்கள் தயாராக இல்லை.
இந்த நிலையில், குவைத் வந்த தொழிலாளர்கள் அங்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாமல், சிலர் கிடைத்த வேலைகளை செய்து கொண்டும், பலர் வேலையே இல்லாமலும் வாழ்ந்து வருகிறார்கள்.
முறைகேடாக வெளிநாட்டு தொழிலாளர்களை அனுமதிக்க பணி அனுமதி அளித்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க குவைத் அரசு தீர்மானித்து உள்ளது. அதோடு இப்படி முறையான வேலை உத்தரவாதம் இல்லாமல் வேலை பார்க்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேரை அவர்களின் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் அடங்குவர்.
மேலும் குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள், தனியார் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் அப்படி குடியிருப்பு பகுதியில் வசிக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் குவைத் அமைச்சர் பாதில் சபர் தெரிவித்துள்ளார்.
எனவே விரைவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குவைத் நாட்டில் இருந்து திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.