கல்லீரல் நோயை ஏற்படுத்தும் ஆபத்துக்கள் நிறைந்த நொறுக்குத் தீனிகள்....!

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. 
நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது  கல்லீரல்தான்.
 
பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து  விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய்களில் படிந்து அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது. இதனால்  இதயத்திற்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீரலில் சுரக்கும் பித்த நீரானது  கரைத்து விடுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது உயிரை பாதுகாக்கும் முக்கிய  உறுப்பான கல்லீரலை கடுமையாக பதம் பார்ப்பது நொறுக்குத் தீனிகள்தான்.
அதிலும் குறிப்பாக பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றில் உணவுப்பொருள் கெடாமல்  இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவை 100 சதவீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத்தீனிகளை அதிகம்  விரும்பி சாப்பிடுவது குழந்தைகள்தான் இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள். நொறுக்குத்  தீனிகளால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன.
 
நொறுக்குத்தீனிகளில் உள்ள நச்சுப்பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சியவற்றை சிறுநீரகம் சுத்திகரிக்கிறது. நொறுக்குத்  தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டால் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்படும்.
 
தற்போது கடைகளில் ரெடிமேடு சப்பாத்தி, புரோட்டா போன்றவை விற்கப்படுகின்றன. இதில் சப்பாத்தி கெடாமல் இருக்க ஒருவகை  ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. இது போன்ற அரை வேக்காட்டு ரெடிமேடு சப்பாத்திகளை வாங்கி நாம் சாப்பிட்டால் கல்லீரல் கடுமையாக  பாதிக்கப்படும். அஜீரணக் கோளாறு, பசியின்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும். 
 
குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகின்றன. நொறுக்கு தீனிகளில் உள்ள கொழுப்பு குழந்தைகளின் கல்லீரலின்  மேல் பகுதியில் படிந்து பருமனாக மாறி விடுகிறது.
 
தற்போது நம் நாட்டில் உள்ள 80 சதவீதம் குழந்தைகள் இது போன்ற கொழுப்பு மிகுந்த ஈரலை உடையவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு  முன்பு குழந்தைகளிடம் இது போன்ற கோளாறுகள் வெறும் 20 சதவீதம் மட்டும்தான் இருந்தது. இதற்கு காரணம் ரசாயணம் கலக்காத  உணவுகள்தான். ஆனால், தற்போது ரசாயணம் கலக்காத உணவைப்பார்ப்பதே அரிதாக உள்ளது.
 
சில உணவுகளில் ருசிக்காக சில ரசாயணங்கள் சேர்க்கப்படுகின்றன. உணவு கெடாமல் இருக்க ரசாயணங்கள்தான் நொறுக்குத்தீனிகளில் அதிக  அளவில் சேர்க்கப்படுகிறது. இதனால்தான், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகள் பலருக்கு கல்லீரல், சிறுநீரக கோளாறுகள்  அதிகம் காணப்படுகிறது.
 
தடுக்கும் வழிகள்:
 
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. வீட்டில் தயாரித்த உணவுகளை கொடுப்பது  நல்லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தினமும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். 
 
குழம்பு போன்றவற்றை சமைத்த அன்று மட்டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநாள் சாப்பிடக் கூடாது. ரசாயண  குளிர்பானங்களை அருந்த கூடாது. கல்லீரல் நோயாளிகள் அசைவ உணவுகளை சாப்பிடக்கூடாது. 
 
சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உணவுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில்  அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்