ஓட்டு போட்ட மக்களையே தெரியாது.. ஷாரூக்கானை ஏன் தெரியணும்? – முதல்வர் கேள்வி!

செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:05 IST)
ஷாரூக்கானின் பதான் பட சர்ச்சை தொடர்பாக பேசிய அசாம் முதல்வர் தனக்கு இப்போதும் கூட ஷாரூக்கானை தெரியாது என்று பேசியுள்ளார்.

ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்து நாளை வெளியாக உள்ள படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி உடையில் வந்ததால் இந்து மத அமைப்பினர் படத்திற்கு எதிராக ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அசாம் தலைநகர் கவுஹாத்தியில் பதான் பேனர்களை கிழித்து சிலர் பிரச்சினை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து கேட்டபோது அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தனக்கு ஷாரூக்கான் யார் என்றே தெரியாது என்று கூறியிருந்தார்.

பின்னர் மறுநாள் ஷாரூக்கான் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதான் படம் வெளியாவதில் இருக்கும் பிரச்சினை குறித்து கவலைப்பட்டதாகவும், வேண்டிய சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தான் உறுதியளித்ததாகவும் கூறியதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

ALSO READ: யார் அந்த ஷாரூக்கான்? கேள்வி கேட்ட முதல்வர்! – இரவில் போன் செய்த ஷாருக்கான்!

எனினும் அவர் ஷாரூக்கானை யாரென்றே தெரியாது என கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா “எனக்கு இப்போதும் ஷாரூக்கானை தெரியாது. பழைய நடிகர்களான அமிதாப்பச்சன், தர்மேந்திரா போன்றவர்களை தெரியும். 2001க்கு பிறகு மொத்தமே 6 அல்லது 7 படங்கள்தான் பார்த்திருப்பேன். அதில் ஷாரூக்கான் என்ற நடிகரை பார்த்ததில்லை. ஆனால் இதை ஏன் இவ்வளவு பெரிதுபடுத்துகிறார்கள்?

முதலில் அசாமில் உள்ள 3 கோடி மக்களையும் எனக்கு தெரியாது. ஓட்டு போட்ட மக்களையே தெரியாத போது, ஷாரூக்கானை ஏன் தெரிய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்