கர்நாடகா முதல்வரை மேடையிலேயே விளாசிய விஜயதாரணி!

திங்கள், 16 ஜனவரி 2017 (12:42 IST)
கர்நாடகா மாநிலம் ஹலசூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் மேடையிலேயே சண்டையிட்டார்.


 
 
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பெங்களூரு ஹலசூரில் 18 ஆண்டுகள் மூடப்பட்டு கிடந்த திருவள்ளுவர் சிலையை திறக்கும் விழா கர்நாடகா காங்கிரஸாரால் நடத்தப்பட்டது. கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணியும் கலந்துகொண்டார்.
 
இந்நிலையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க சிலை அமைந்துள்ள பீடத்திற்கு கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை தொடர்ந்து விஜயதரணியும் சென்றார். ஆனால் அவரை கர்நாடகா போலீஸார் தடுத்து நிறுத்தினர். தான் எம்எல்ஏ என்று கூறியும் போலீஸார் விடவில்லை. இதனால் அவர் முதல்வரை நோக்கி சத்தம் போட்டார்.
 
பின்னர் முதல்வரின் உத்தரவின் படி விஜயதாரணியை கர்நாடகா போலீஸார் மேடைக்கு செல்ல அனுமதித்தனர். மேடைக்கு வந்த விஜயதரணி, முதல்வர் சித்தராமையாவிடம் சண்டை போட்டார். உங்க ஊருக்கு வந்த எம்எல்ஏவை இப்படித்தான் அவமானப்படுத்துவீர்களா என கேட்டார்.
 
சித்தராமையா சமாதானம் கூறியும் விடாத விஜயதரணி தொடர்ந்து சில நிமிடங்கள் அவரை பார்த்து கையை நீட்டியபடி வசைபாடினார். பின்னர் அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் விஜயதாரணியை சமாதானம் செய்து சிலைக்கு மாலை அணிவித்து சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்