”ஸ்விக்கி” நிறுவனம் செய்த சிறப்பான சம்பவம்: குவியும் பாராட்டுகள்

வெள்ளி, 12 ஜூலை 2019 (16:24 IST)
ஆன்லைன் உணவு நிறுவனமான ஸ்விக்கி, முதன் முதலாக சம்யுக்தா விஜயன் என்ற திருநங்கையை முதன்மை திட்ட மேலாளராக நியமித்துள்ளது.

தொழில்நுட்ப வல்லுநரான சம்யுக்தா விஜயன், தமிழகத்தைச் சேர்ந்த பொள்ளாச்சியில் பிறந்தவர். ஃபேஷன் டிசைனரான இவர், அமேசான் நிறுவனத்தில் சில வருடங்கள் பணிபுரிந்துள்ளார். மேலும் திருநங்கைகள் ஃபேஷன், சிகை அலங்காரம் போன்றவற்றில் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக டவுட்ஸ்டூடியோ என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபேஷ்ன் டிசைனராக பணியாற்றிய இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தார். இந்நிலையில் சம்யுக்தா, தற்போது இந்தியாவின் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ”ஸ்விக்கி” நிறுவனத்தின் பிரின்சிபல் புரோகிராம் மேனேஜர் என்ற முக்கியமான பதவியில் உள்ளார்.

இதனை தொடர்ந்து ஒரு தனியார் ஊடகத்திற்கு தன்னுடைய பேட்டியை அளித்த சம்யுக்தா, தற்போது கார்ப்ரேட் நிறுவனங்கள் திருநங்கைகளுக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும், ஆனால் அந்த கார்ப்ரேட் நிறுவனங்கள், திருநங்கைகளுக்கான ஆதரவு குழுக்களை கட்டமைக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் , தனக்கு குடும்பத்தின் ஆதரவு இருந்ததால் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவைகளில் கவனம் செலுத்தமுடிந்தது எனவும், ஆனால் பல திருநங்கைகள் சரியான கல்வி தகுதி பெற முடியாத நிலையில் உள்ளனர் எனவும் கூறினார்.

திருநங்கைகளுக்கு அனைத்து துறைகளிலும் பணியாற்றுவதற்கான ஆற்றல் உள்ளது எனவும், இன்டர்ன்ஷிப் அல்லது பிற பயிற்சிகள் மூலம் சரியான வாய்ப்புகளை அளிக்கும்போது, திருநங்கைகளால் மிக எளிதில் வேலை வாய்ப்புகளை பெறமுடியும் எனவும், அந்த பேட்டியில் சம்யுக்தா விஜயன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்