ரூ.500 ரூ.1000 நோட்டுகள் செல்லாது : ரிசர்வ் வங்கி அளிக்கும் முக்கிய தகவல்கள்

புதன், 9 நவம்பர் 2016 (12:09 IST)
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்ட நிலையில், பொதுமக்களுக்கு ரிசர்வ வங்கி சில முக்கிய தகவல்களையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளது.


 

 
1. நாளை முதல் (நவ.10), ஏற்கனவே நம்மிடம் உள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை எந்த ஒரு வங்கி கிளைகள் அல்லது தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூ.500 அல்லது ரூ.2000 நோட்டுகளாக பெற்றுக் கொள்ளலாம். 
 
2. நபர் ஒருவர் ரூ.4000 வரை பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அதற்கு மேலான தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். 
 
3.பணத்தை மாற்றும் போது, டெபாசிட் செய்யும் போதும், அடையாள அட்டையை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும். அந்த அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும். இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட உள்ளன.
 
4. முக்கியமாக, ரூ.4000 வரை, எந்த வங்கியிலும் அல்லது தபால் நிலையத்திலும் புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு மேற்பட்ட தொகையை மாற்றுவதற்கு, எந்த வங்கியில் கணக்கு உள்ளதோ அங்குதான் செல்ல வேண்டும்.
 
5.  நவம்பர் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ஏடிஎம்-ல் ரூ.2000 வரையும், 19ம் தேதி முதல் ரூ.4000 வரை எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பின்பு நாள் ஒன்றுக்கு உச்ச வரம்பு 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.
 
6. நவம்பர் 24ம் தேதி வரை பணம் எடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாயும், காசோலையில் 20,000 ரூபாய் வரையும் பணம் எடுக்க முடியும். தற்போது அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை ஏடிஎம் மையங்களில் டெபாசிட் செய்யலாம்.
 
7. இதில், மொபைல் பேங்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் கிடையாது.
 
8. டிசம்பர் 31-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்