முதலாளிகளுக்குக் கடன் தள்ளுபடி :விவசாயிகளுக்குக் கிடையாதா? – ராகுல் காந்தி காட்டம்

புதன், 3 அக்டோபர் 2018 (10:40 IST)
காந்தி ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி மற்றும் பாஜக-வை கடுமையாக தாக்கிப் பேசினார்.

நாடு முழுவதும் நேற்று மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. மகாரஷ்ட்ரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு ராகுல் காந்தி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது ‘நீங்கள் (மக்கள்) மோடியை நம்பினீர்கள், ஆனால் அவர் உங்கள் நம்பிக்கையை ஏமாற்றிவிட்டார். தற்போது காங்கிரஸையும் மகாதமாவையும் நம்புங்கள். பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனட்டிக்ஸ் நிறுவனத்திற்குப் பதிலாக ஏன் அம்பானியின் ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டது என மோடி மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். இதுபற்றி நான் நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியபோது அவர் என் கண்களைப் பார்க்காமல் அமர்ந்திருந்தார். ஏனென்றால் அவர் நாட்டு மக்களிடம் பொய் சொல்லியுள்ளார்.

பிரான்ஸின் முன்னாள் பிரதமர் பிரான்கோஸ் ஓலாந் இந்தியா எங்களுக்கு ரிலையன்ஸை தவிர வேறு கம்பெனிகளை பரிந்துரை செய்யவில்லை என்று கூறியதை மேற்கோள் காட்டிய ராகுல் ‘அவர் இந்நாட்டுக்கு பாதுகாவலர் இல்லை, முதலாளிகளின் கூட்டாளி’ என்றார்.

விவசாயிகள் பேரணிக் குறித்து பேசிய அவர் ‘இந்தியப் பெரும் பணக்காரர்களுக்கு வழங்கப்பட்ட 3.20 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்யும் இந்திய அரசு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய மறுப்பதேன்’ எனவும் கேள்வியெழுப்பினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்