மாணவிகளின் கழிவறையில் செல்போனில் ஆபாசப் படம் பிடித்த 10ஆம் வகுப்பு மாணவர்கள்

செவ்வாய், 25 நவம்பர் 2014 (17:44 IST)
ஹைதரபாத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறையில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் செல்போனில் ஆபாசப் படம் பிடித்துள்ளனர்.
 
ஹைதராபாத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் இருபாலரும் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று மாணவிகள் கழிவறைக்குள் சென்று, 10ஆம் வகுப்பு மாணவர்கள் சிறுமிகளை செல்போனில் ஆபாச படம் எடுத்து அதனை மற்ற மாணவர்களுக்கு அனுப்பி ரசித்துள்ளனர்.
 
மேலும் அந்த சிறுமிகளிடம் ஆபாசப் படத்தை காட்டியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், தங்களை கட்டிப்பிடிக்கும் படியும், முத்தம் கொடுக்கும் படியும் தொந்தரவு செய்துள்ளனர். இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். ஆனாலும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
இந்நிலையில் ஹைதராபாத் குழந்தைகள் நல உரிமை வாரியத்திடம் பாதிக்கப்பட்ட மாணவிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த காவல் துறையினருக்கு குழந்தைகள் நல வாரியம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்த தகவல் பரவியதும் நேற்று ஏராளமான பெற்றோர்கள் பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
 
‘‘நல்ல மாணவர்களை உருவாக்க பள்ளி நிர்வாகம் தவறிவிட்டது’’ என்று குழந்தைகள் நல உரிமை வாரியத்தின் தலைவராக இருக்கும் அனுராதா ராவ் கூறியுள்ளார்.
 
இந்தப் புகார் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்