கர்நாடக அரசு பரிந்துரைக்கும் குழுவைத்தான் அமைக்கப் போகிறதா மத்திய அரசு?

வியாழன், 29 மார்ச் 2018 (09:59 IST)
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விடுத்த ஆறுவார கால கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் இன்னும் அமைக்கப்படாததால், இன்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் தமிழக எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒருபுறம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இன்னொரு புறம் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், காவிரி மேலாண்மை வாரியம் இல்லையே அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வோம் என நேற்று பாராளுமன்றத்தில் உணர்ச்சிகரமாக பேசியுள்ளார்.
 
இந்த விவகாரத்தில், கெடு முடியும் நாள் வரை மத்திய அரசு மௌனம் சாதிப்பது, இந்த விவகாரத்தில் சந்தேகத்தை கிளப்புவதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில், கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில்கொண்டே பாஜக அரசு அமைதி காக்கிறது என பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதிலாக ஒரு குழுவை அமைக்கும் திட்டத்தில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது. அதைத்தான் கர்நாடக அரசும் விரும்புகிறது. அதை விட முக்கியமாக, கர்நாடக அரசு பரிந்துரைக்கும் அதிகாரிகள்தான் அந்த குழுவில் இருக்கப் போகிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவலும் வெளியே கசிந்துள்ளது.
 
 
தற்போதைக்கு இதை தள்ளிப்போடுவதற்காக, உச்ச நீதிமன்றம் கூறிய ‘திட்டம்’ என்கிற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, வருகின்ற சனிக்கிழமை மத்திய அரசு சார்பில் மனு அளிக்கப்படவுள்ளது. அதன் உச்ச நீதிமன்றம் அளிக்கும் விளக்கத்திற்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என்கிற நிலைப்பாட்டில் மத்திய அரசு இருப்பதாக தெரிகிறது.
 
குறிப்பாக, கர்நாடகாவில் வருகிற மே 12ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரைக்கும் இந்த விவகாரத்தை தள்ளிப்போடவே மத்திய அரசு விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்