மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

Siva

ஞாயிறு, 24 ஆகஸ்ட் 2025 (14:55 IST)
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் தனது மனைவி நிக்கியை கொடூரமாக கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விபின் என்பவர், தப்பியோட முயன்றபோது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்திப் பிடித்தனர்.
 
நிக்கி கொலை வழக்கில், விபினை விசாரித்த போலீஸார், அவர் தன் மனைவியை எரிப்பதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு பாட்டிலை கைப்பற்றுவதற்காக அழைத்து சென்றனர். சௌரஹா சௌக் பகுதிக்கு அருகே வந்தபோது, விபின் திடீரென ஒரு காவலரிடமிருந்து துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். பலமுறை எச்சரித்தும் அவர் நிற்காததால், போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் விபினின் காலில் குண்டு பாய்ந்ததால், அவர் பிடிபட்டார்.
 
கைது செய்யப்பட்ட விபினிடம் விசாரணை நடத்தியபோது, "எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நான் அவளை கொல்லவில்லை. அவளாகத்தான் இறந்தாள். கணவன் மனைவி சண்டை மிகவும் சாதாரணம்" என்று விபின் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நிக்கியின் தந்தை வரவேற்பு தெரிவித்துள்ளார். "போலீஸ் செய்தது சரிதான். ஒரு குற்றவாளி எப்போதும் ஓடத்தான் முயற்சிப்பான். விபின் ஒரு குற்றவாளி" என்று அவர் கூறியதோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
 
முன்னதாக, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று நிக்கியின் தந்தை எச்சரித்திருந்தார். "யோகிஜி அரசு இது. குற்றவாளிகள் என்கவுன்டரில் கொல்லப்பட வேண்டும், அவர்களது வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்