மூன்று வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படும்! – பிரதமர் மோடி திடீர் அறிவிப்பு!

வெள்ளி, 19 நவம்பர் 2021 (09:34 IST)
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வரும் நிலையில் அந்த சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய நிலையில் விவசாயிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா காலகட்டத்திலும் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலமாக இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இன்று தற்போது நாட்டு மக்களிடையே உரையாடிய பிரதமர் மோடி, ஆரம்பம் முதற்கொண்டே தான் விவசாயிகளின் நலனுக்காக ஏகப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும், விவசாயிகளின் முன்னேற்றத்தை மனதில் கொண்டே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாகவும் பேசினார். பின்னர் வேளாண் சட்டங்களை விவசாயிகள் எதிர்த்து வருவது குறித்து பேசிய அவர் எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு திரும்பி செல்லுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமரின் இந்த திடீர் அறிவிப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்