வேறொரு நடிகையையும் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பல்சர் சுனில் - பகீர் செய்தி

செவ்வாய், 18 ஜூலை 2017 (13:40 IST)
கேரள நடிகையை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனில் சில வருடங்களுக்கு முன்பு, மற்றொரு நடிகையையும் கடத்தியது அம்பலமாகியுள்ளது.


 

 
கடந்த பிப்ரவரி மாதம், கேரள நடிகையை பல்சர் சுனில் உள்ளிட்ட சிலர் காரில் கடத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர். இந்த வழக்கில் பல்சர் சுனில் மற்றும் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும்  இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி நடிகர் திலீப்பை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். தற்போது அவரும் சிறையில் இருக்கிறார். இந்த விவகாரம் கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், 2011ம் ஆண்டு மற்றொரு நடிகையையும், இதேபோல் பல்சர் சுனில் கடத்திச் சென்று பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது தெரியவந்துள்ளது. கேரள நடிகை கடத்தப்பட்டது தொடர்பாக மலையாள திரைப்பட தயாரிப்பாளரான ஜானி சர்க்காரியாவிடம் போலீசார் சமீபத்தில் விசாரணை நடத்தினர். ஏனெனில், சிலவருடங்களுக்கு முன்பு அவரிடம் பல்சர் சுனில் டிரைவராக வேலை செய்தார் என்பதால் இந்த விசாரணை நடத்தப்பட்டது. அப்போதுதான் ஜானி சர்க்காரியா அளித்த வாக்குமூலம் போலீசாருக்கு அதிர்ச்சையை ஏற்படுத்தியது.


 

 
அதாவது, 2011ம் ஆண்டு பல்சர் சுனில் அவரிடம் வேலை பார்த்த போது, படப்பிடிப்பில் தனியாக இருந்த ஒரு நடிகையை அவர் காரில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார் எனவும், ஆனால், பயத்தால் அந்த நடிகை போலீசாரிடம் புகார் அளிக்கவில்லைலை எனவும் அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். மேலும், அந்த சம்பவத்திற்கு பின்புதான் பல்சர் சுனிலை தான் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதனைத் தொடர்ந்து, பல்சர் சுனில் மீது மற்றொரு வழக்கையும் போலீசார் பதிவு செய்தனர். எனவே, இந்த வழக்கில் பல்சர் சுனில் மீண்டும் கைதாகும் நிலையில் இருக்கிறார். மேலும், இதிலும் நடிகர் திலீப்பிற்கு ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணையில் இறங்க உள்ளனர். 
 
கேரள நடிகை வழக்கில் நாளுக்கு நாள் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருப்பது, கேரள சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்