2.5 பில்லியன் டாலர் பங்கு!? அதானி குட்டு அம்பலம்? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

வியாழன், 2 பிப்ரவரி 2023 (08:32 IST)
பிரபல இந்திய தொழிலதிபரான அதானி பங்கு வர்த்தகத்தில் போலி கம்பெனிகளை வைத்து தன் பங்கை தானே வாங்கி பங்கு மதிப்பை உயர்த்தியதாக தற்போது பிரபல பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

உலக பணக்காரர்களில் டாப் 10 பட்டியலில் இருந்த கௌதம் அதானியின் அதான் குழுமம் பங்கு வர்த்தகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டென்பெர்க் நிறுவனம் வெளியிட்ட 100 பக்க அறிக்கை அதானி குழுமத்தின் பங்குகளை கடுமையாக சரித்துள்ளது. இதனால் அதானி குழுமம் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் பங்குகளும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகின்றன.

அதானி குழுமம் வெவ்வேறு போலி பெயர்களில் வெளிநாடுகளில் சில பங்கு வர்த்தக ஏஜென்சிகளை உருவாக்கி தன் பங்குகளை தானே வாங்கி பின் அதை விற்று தங்களது பங்கின் மதிப்பை உயர்த்தியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு அதானியின் சகோதரர்களான வினோத் அதானி, ராஜேஷ் அதானியும் உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு உள்ளது.



இந்நிலையில் தற்போது பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில் அதானியின் லெட்டர்பேட் நிறுவனங்கள் இரண்டின் மூலமாக 2.5 பில்லியன் டாலர்கள் பங்கு முறைகேடு செய்யப்பட்டது குறித்து கூறப்பட்டுள்ளது. அதில் எலாரா கேப்பிடல் ப்ரைவேட் லிமிடெட் என்னும் லண்டனை தலைமையகமாக கொண்ட முதலீட்டு நிறுவனமும், மோனார்க் நெட்வொர்த் கேப்பிடல் என்ற நிறுவனமும் திங்கட்கிழமை 2.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதானி பங்குகளை வாங்கி அதை புதன்கிழமையே கேன்சல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் மோனார்க் நெட்வொர்த் கேபிடல் என்னும் ப்ரோக்கரேஜ் நிறுவனம் 2016லிருந்து அதானி ப்ராபர்டி ப்ரைவேட் நிறுவனத்தின் நிதியின் கீழ் இயங்கி வருவதாக ஹிண்டென்பெர்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதானி குழுமத்தால் நிர்வகிக்கப்படும் அல்புலா நிறுவனம் மோனார்க் நிறுவனத்தில் 2009 முதலாக தனது 10% உரிமையை வைத்திருப்பதை இந்த செய்தி கட்டுரை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் மூலம் அதானி நிறுவனம் தனது நிறுவனங்கள் மூலமாக தனது பங்கை தானே வாங்கி பங்கு மதிப்பை அதிகரித்துள்ளது நிரூபணமாகியுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு வரும் பலர் "Own $2.5 Billion Share Sale" என்ற வார்த்தையை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்