சிறுநீர்ப் பையுடன் வங்கியில் பணம் மாற்ற வந்த முதியவர்

சனி, 19 நவம்பர் 2016 (16:46 IST)
முதியவர் ஒருவர் தன்னிடம் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற, சிறுநீர் பையுடன் வங்கிக்கு வந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.


கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜார்ஜ். 67 வயதாகும் இவர் கடந்த 12 வருடமாக சிறுநீரகத் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். 24 மணி நேரமும் இவர், சிறுநீரை சேகரிக்கும் பையுடன்தான் நடமாடுகிறார்.

இந்நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த ஜார்ஜ், தன்னிடம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயற்சித்தார்.

ஆனால் வங்கிக்கு நேரில் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால் இவர் பரணிக்காவு கோயிக்கல் கிளை பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு, சிறுநீர்ப் பையுடனேயே சென்று, வரிசையில் நின்று பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றினார்.

சிறுநீர்ப் பையையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவர் பெரும் சிரமத்திற்கு இடையே வரிசையில் காத்திருந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்