கண்காணிப்பு கேமரா, கைரேகை! நீட் தேர்வு முறைகேட்டை தடுக்க புதிய விதிமுறைகள்!

புதன், 4 டிசம்பர் 2019 (14:04 IST)
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க புதிய விதிமுறைகள் அடுத்த தேர்விலிருந்து அமல்படுத்தப்பட இருக்கின்றன.

கடந்த நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பல மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் பிடிபட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு மீண்டும் நீட் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், முன்பு போல முறைகேடுகள் நடக்காமல் இருக்க பல்வேறு புதிய விதிமுறைகளை அமல்படுத்த தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது.

அதன்படி நீட் தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களிலும் கேமரா பொருத்தி மாணவர்கள் தேர்வு எழுதுவது கண்காணிக்கப்பட உள்ளது. சென்ற முறை தேர்வு மையங்களில் மாணவர்களின் கைரேகை பெறப்பட்டது. ஆனால் இந்த முறை தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போதே கைரேகையை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், தேர்வு மையத்தில் கைரேகை ஒற்றுமை சோதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளதாக இந்த திட்டத்திற்கு சிலர் அதிருப்தி தெரிவித்தாலும், முறைகேடுகளை தவிர்க்க இதுபோன்ற விதிமுறைகள் அவசியம் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்