மனைவி, கள்ளக்காதலன் தலைகளை வெட்டி, காவடி போல கட்டி வந்தவர் கைது

புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:15 IST)
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மனைவியையும், அவரது கள்ளக்காதலனின் தலையையும் வெட்டி, காவடி போல கட்டிவந்து காவல் நிலையத்தில் சரணடைந்த ஒருவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால பாளையத்தைச் சேர்ந்த தம்பதிகள் குண்டண்ணா, ஜானகியம்மா.
 
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
இந்த நிலையில் ஜானகியம்மாவுக்கும், அவரது உறவினருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது. இதனை கணவர் குண்டண்ணா கண்டித்தார். ஆனாலும் ஜானகியம்மா கேட்கவில்லை.
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜானகியம்மா வீட்டில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கள்ளக்காதலனுடன் குடித்தனம் நடத்த தொடங்கினார்.
 
இது குண்டண்ணாவுக்கு ஆத்திரமூட்டியது. மனைவியை பழி வாங்க முடிவு செய்தார்.
 
நேற்று மனைவியின் கள்ளக்காதலன் நாராயணன் வயலில் குனிந்து வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு சென்ற குண்டண்ணா அரிவாளால் அவரது கழுத்தில் வெட்டினார். இதில் அவரது தலை துண்டாகி விழுந்தது.
 
பின்னர் அடுத்த வயலில் வேலை பார்த்து கொண்டு இருந்த மனைவி ஜானகியம்மாவை வெட்டி கொலை செய்தார். அவரது தலையையும் துண்டித்தார்.
 
பின்னர் 2 பேரின் தலையையும் தனித்தனியாக துணியில் கட்டினார். பின்னர் அதனை காவடி போல் கட்டி 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாடேறு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
 
அவர் கொடுத்த தகவலையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று 2 பேரின் பிணங்களையும் கைப்பற்றினர். குண்டண்ணா கைது செய்யப்பட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்