டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தின் அடிக்கல் நாட்டு விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது பேசிய மோடி அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டினார்.
இது குறித்து பிரதமர் மோடி பேசுகையில், “அம்பேத்கர், சமூகத்தை இணைப்பதில் நம்பிக்கை கொண்டவர். பிரிப்பதில் அல்ல. அவர்தான் எனக்கு உந்து சக்தியாக திகழ்ந்தார். நான் பிரதமர் ஆவதற்கு காரணமாக இருந்தார். அவரால்தான் அரசியலில் இன்றைய உயர்ந்த நிலையை அடைந்துள்ளேன்.
அம்பேத்கர் இல்லாவிட்டால், நான் எங்கு இருந்திருப்பேன் என்று நினைத்துப் பார்த்துக்கொள்வேன். அவரை தலித்துக்களின் தலைவர் என்று சொல்வதை கேட்கும்போதெல்லாம் எனக்கு வேதனையாக இருக்கும். அவர் தலித்துகளின் தலைவர் அல்ல, மனித இனத்தின் தலைவர்.
அம்பேத்கர், உயிருடன் இருந்தபோது, சமூக தீண்டாமையையும், மறைந்த பிறகு அரசியல் தீண்டாமையையும் சந்தித்தார். ஆனால், அவர் படைத்த அரசியல் சட்டத்தில் தனது பாதிப்புகளை அவர் இடம்பெறச் செய்யவில்லை. அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை கீற்றாக திகழ்ந்தார்” என்றார்.