திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக தமிழக மருத்துவ மாணவர் மீது பொய் வழக்கு

திங்கள், 5 பிப்ரவரி 2018 (10:21 IST)
திருப்பதி அருகே செம்மரம் கடத்திக் கொண்டு வந்ததாக தமிழக மருத்துவ மாணவரை ஆந்திர போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். 
 
 
ஆந்திர போலீஸார், திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் கடத்துவதாக அப்பாவி தமிழர்களின் மீது பழிசுமத்தி அவர்களை கைது செய்வதும், அவர்களை துன்புறுத்துவதுமாய் இருக்கின்றனர். திருப்பதி அருகே உள்ள வனப்பகுதியில் செம்மரங்களை கடத்த முயன்றதாக கூறி இரண்டு வருடத்திற்கு முன்பு 20 அப்பாவித் தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். 
 
இந்நிலையில் வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜீத் என்ற மருத்துவக் கல்லூரி மாணவன் பகுதி நேரமாக கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். அஜீத் நேற்று இரவு ஆக்டிங் டிரைவராக திருப்பதி அருகே கரக்கம்பாடி சாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் காரை வழி மறித்து அஜீத்தையும்,  இயேசு என்பவரையும் செம்மரம் கடத்தியதாக கூறி கைது செய்தனர்.
 
இதையடுத்து தனக்கும் செம்மரக்கட்டைகளை கடத்திய கும்பலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று கூறிய அஜீத் தான் ஒரு மருத்துவ மாணவர் என்று கூறி அழுதுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற பத்திரிக்கையாளர்களை ஆந்திர போலீஸார் விரட்டியுள்ளனர். இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் பலர் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்