கொல்கத்தா மாணவி கொலை விவகாரம்: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்!

Mahendran

வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (17:11 IST)
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் என்ற மருத்துவமனையில் மருத்துவ மாணவியாக இருந்த இளம்பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை செய்து கொண்டிருக்கும் நிலையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மருத்துவர்கள் திடீரென போராட்டத்தில் இறங்கியதால் நோயாளிகள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தை அரசியல் ஆக்க வேண்டாம் என்றும் சட்டம் அதன் கடமையை செய்யும் என்று கூறிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட், நீதித்துறையும் மருத்துவ துறையும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடியாது என்றும் இரு துறைகளும் மக்களின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட துறைகள் என்றும் இது குறித்த வழக்கின் போது தெரிவித்தார்.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்றுக் கொண்ட மருத்துவர்கள் தற்போது போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்துள்ளனர்.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்