மகளுக்கு நடந்த கொடுமை; குடும்பத்தையே கொன்ற தந்தை! – ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்!

ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (10:02 IST)
ஆந்திராவில் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக எதிர் தரப்பினர் குடும்பமே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விசாகப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் அப்பாலாராஜூ. இவர் வீட்டின் அருகே விஜய் கிரண் என்பவரும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு அப்பாலாராஜூவின் மகள் விஜய் கிரணின் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விஜய் கிரண் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் கிரணின் மனைவியும் இதற்கு உடந்தை எனவும் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து அவர் மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்பேரில் கைது செய்யப்பட்ட விஜய் கிரண் சில நாட்கள் கழித்து ஜாமீனில் வெளிவந்த நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளோடு வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் தந்தையை காண மீண்டும் விசாகப்பட்டிணத்திற்கு குடும்பத்தோடு வந்துள்ளார். அனைவரும் இரவில் தூங்கி கொண்டிருந்த நிலையில் பழிவாங்க எண்ணிய அப்பாலாராஜூ இரவோடு இரவாக வீட்டிற்குள் புகுந்து அனைவரையும் சரமாரியாக தாக்கியதில் விஜய் கிரணின் ஆறு மாத மற்றும் இரண்டு வயது குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகியுள்ளனர்

.இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பாலாராஜூவை போலீஸார் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்