ஜெயலலிதா மீதான ஜாமீன் வழக்கு முடிவுக்கு வந்தது - உச்ச நீதி மன்றம் உத்தரவு

சனி, 11 ஜூலை 2015 (00:46 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான ஜாமின் வழக்கை உச்ச நீதி மன்றம் முடித்து வைத்தது.
 
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலருமைச்சருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
 
இதனையடுத்து, பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்திரவிட்டது.
 
சிறப்பு நீதி மன்ற தண்டனையை எதிர்த்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார்.
 
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலை செய்யப்பட்டதால், அவர்களின் ஜாமின் மனுக்கள் முடித்து வைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
 
ஆனால், ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்