சொத்துகுவிப்பு வழக்கு: ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வாதம் முடிந்தது

வெள்ளி, 20 பிப்ரவரி 2015 (15:36 IST)
பெங்களூர் தனி நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
 
ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், குமார் ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அதைத் தொடர்ந்து சசிகலா தரப்பிலும் வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். சுதாகரன் மற்றும் இளவரசி தரப்பில் வழக்கறிஞர் சுதந்திரம் வாதம் செய்தார்.
 
இந்த நிலையில் இன்று இளவரசி தரப்பில் வாதம் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரின் வாதமும் இன்றுடன் முடிந்தது. 31 நாட்கள் நடந்த விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா தரப்பில் தலா 9 நாட்களும், சுதாகரன், இளவரசி தரப்பில் தலா 6 நாட்களும் விவாதம் நடந்தது. இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தனியார் நிறுவனத்தின் வாதம் தொடங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்