ராணுவ பணியோடு பட்டப்படிப்பும் முடிக்கலாம்! – அக்னிபாத் திட்டத்தில் சிறப்பம்சம்!

வியாழன், 16 ஜூன் 2022 (11:15 IST)
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த “அக்னிபாத் திட்டம்” மூலம் ராணுவ பணியோடு பட்டப்படிப்பையும் முடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் 4 ஆண்டுகால குறுகிய கால ராணுவ சேவை செய்வதற்கான “அக்னிபாத் திட்டம்” மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர இளைஞர்கள், பெண்கள் 18வயது முதல் 21 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். வழக்கமான ராணுவ உடற்தகுதி நிர்ணயங்களே அக்னிபாத் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும். இந்த திட்டத்தின் கீழ் பணிபுரியும் வீரர்களுக்கு முதல் ஆண்டில் ரூ.4.76 லட்சம் ஆண்டு ஊதியமும், 4வது ஆண்டில் 6.92 லட்சம் ஆண்டு ஊதியமாகவும் வழங்கப்படும். 4 ஆண்டுகளை முழுவதுமாக முடிக்கும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு சேவை நிதியாக தலா ரூ.11.7 லட்சம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைபவர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 21 வரை என்று கூறப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ராணுவத்தில் இருந்தபடியே பட்டப்படிப்பு படிப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகால இந்த பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் 3 ஆண்டு கால ராணுவ செயல்திறன் அடிப்படையிலும், மீதம் 50 சதவீதம் மதிப்பெண்கள் வீரர்கள், வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கும் கணிதம், வரலாறு, அரசியல், விவசாயம், அறிவியல், பொது நிர்வாகம், சமூகவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் இருந்தும் கணக்கிடப்படும். இந்த பட்டப்படிப்பை இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைகழகம் வழங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்