நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணம் செய்த 242 பேர்களில் 241 பேர் உயிரிழந்தனர் என்பதும், இவர்களில் ஏழு பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் உயிரிழந்தார் என்பது அதிர்ச்சிக்குள்ளான தகவலாகும்.
இந்த நிலையில், இந்த துயர விபத்தில் இருந்து உயிர் தப்பிய ஒரே நபர் ரமேஷ் என்பவர் பேட்டி அளித்துள்ளார். "எரியும் விமானத்திலிருந்து நான் எப்படி தப்பித்தேன் என்று எனக்கே தெரியவில்லை. விமானம் புறப்பட்ட 30 வினாடிகளில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. நான் எழுந்தபோது, என்னை சுற்றிலும் இறந்த உடல்கள் கிடந்தன. நான் மிகுந்த அச்சப்பட்டுப் போனேன். எழுந்து ஓடினேன்.
விமானத்தின் பாகங்கள் என்னை சுற்றிலும் சிதறிக் கிடந்தன. நான் எப்படி விமானத்திலிருந்து வெளியே வந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. பின்னர் யாரோ ஒருவர் என்னை கைதாங்கலாகப் பிடித்து, ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு வந்ததுதான் எனக்குத் தெரியும்," என்று தெரிவித்துள்ளார்.